ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த வங்கி அதிகாரி கடன் தொல்லையால் மனைவி, மகன்களைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பார்கலே வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வரும் மணிகண்டன், கடந்த 31ம் தேதி முதல் குடியிருப்பு பகுதியில் யாரும் பார்க்கவில்லை என்பதால் சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டன் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து குடியிருப்பு பகுதியில் இருப்பவர்கள் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் மணிகண்டன் தனது மனைவி தாராவை (40) கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததும், மகன்கள் தரண்(10), தகன்(1) ஆகியோரை தலையணையால் அழுத்தி கொலை செய்ததும் தெரியவந்தது. மனைவி மற்றும் மகன்களைக் கொலை செய்த மணிகண்டன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணிகண்டன் ஆன்லைன் கேம் மூலமாக ஏகப்பட்ட பணத்தை இழந்ததாகவும், அதற்காக 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடன் தொல்லை தாங்காததால் தான் மனைவி மற்றும் மகன்களைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.