மதுரை:-
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பசும்பொன்னில் நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது.
இந்தநிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோல, தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதனிடையே பசும்பொன்னில் தேவர் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வமும் கலந்துகொள்ளமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா தொடர்பான விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் சென்றால் சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதனால் ஓபிஎஸ் பசும்பொன்னிற்கு தனியாக சென்று ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் மனைவி சமீபத்தில் உயிரிழந்தார். எனவே அவரது குடும்பத்தினர் இந்த ஆண்டு குரு பூஜை நிகழ்வில் கலந்துகொள்ளக் கூடாது என உறவினர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
எனவே பெரியகுளத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல், பழனிசாமியும் சென்னை நந்தனம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவரை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி மற்றும் தம்பிதுரை ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக திமுக அமைச்சர்கள், துரை முருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தா.மோ.அன்பரசன்,மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரும் தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து பா.ம.க சார்பாக ஏ.க.மூர்த்தியும் , பாஜக சார்பில் துணை பொதுச் செயலாளர் வி.பி துரைசாமி, மற்றும் கரு.நாகராஜன், வினோஜி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இவர்களை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனிடையே இந்த ஆண்டு பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜையை அதிமுக தலைமையே இந்த குரு பூஜை நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.