சென்னை:
தமிழகத்திலுள்ள அம்மா உணவகங்களை நிர்வகிக்க அறக்கட்டளையை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான அம்மா உணவகம் 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் ஏழை, எளிய மக்களுக்கு குறைவான விலையில் தரமான உணவு கிடைக்கிறது.இத்திட்டம் வெற்றி பெற்றதுடன் பல்வேறு மாநிலங்களும் மலிவு விலை உணவகம் அமைக்க முன் உதாரணமாக அமைந்துள்ளது.
இந்த உணவகத்தில் இட்லி ரூ.1க்கும், கலவை சாதம் ரூ.3க்கும், சாம்பார் சாதம் ரூ.5க்கும், சப்பாத்தி ரூ.3க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் கொரோனா காலத்தில் அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள 700க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டன. அம்மா உணவகத்தால், சென்னை மாநகராட்சிக்கு மட்டும் சுமார் ரூ.100 கோடி வரை செலவாவதாகவும், ஆனால் வருவாய் ரூ.30 கோடி மட்டுமே கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
அம்மா உணவகங்களால் கடந்த ஆறு ஆண்டுகளில் அரசுக்கு ரூ.468 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இத்திட்டத்தை கைவிடலாம் என்றும் சில மாதங்களுக்கு முன் குரல்கள் எழுந்தன. மேலும் இதனை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க, அறக்கட்டளை அமைத்து நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அம்மா உணவகங்களுக்கு புத்துணர்ச்சியூட்ட 100 கோடி ரூபாய் சிறப்பு நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையில் சுகாதார இணை ஆணையர், நகராட்சி நிர்வாக ஆணையர், நீர் வழங்கல் துறை ஆணையர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பொது மக்களிடம் இருந்து நிதி பெறுவது, டீ, காபி, காய்கறி மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பலவற்றிற்கும் பயன்படுத்தி நிதி திரட்டலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.