சென்னை:-
சென்னை கோவை மதுரை ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரை முழு அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
இதன்படி சென்னை கோவை மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு 9 மணி வரை முழு அளவிலான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.
சேலம் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 இரவு 9 வரை முழு அளவிலான ஊரடங்கு அமல் படுத்தப்படும்.
ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரை இந்த ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட அத்தியாவசியப் பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்:-
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள்,மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்
அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய், மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.
இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும், அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்
அம்மா உணவகங்கள், ஏடிஎம் தானியங்கி நிலையங்கள் செயல்படும்
உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து பெறப்படும் உணவுகளுக்கு அனுமதி அளிக்கப்படும்
முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்
ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்
ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்
கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். அதேபோல், காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கொண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.
மேற்குறிப்பிட்ட மாநகராட்சிகளைத் தவிர பிற இடங்களில்/பகுதிகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்/அனுமதிகள் தொடரும். இக்கால கட்டத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இப்பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும். மாநகரத்தில் பிற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையை யாரேனும் மீறினால், அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் என்பதால், இதை கட்டுப்படுத்த இந்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படியும் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.