இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அதனையடுத்து கொரோனா தடுப்பூசிகள் இரண்டு முறை செலுத்தப்பட வேண்டும். இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்டால்தான் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறிவருகிறார்கள். அதனையடுத்து கடந்த 15ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டவர்களுக்கு, இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கியது.
அந்தவகையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சுகாதாரத்துறையினரின் தொடர் உழைப்பால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். கொரோனா தடுப்பூசிகள் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்திய அமைச்சர் விஜபாஸ்கர், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தார்.