சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டும் 60 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளது. இதுபோல மாவட்டம் முழுவதும் 220 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டு உள்ளது.
வருகிற 24-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒரு சில டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் கடையை திறந்து மதுபாட்டில்களை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது. இதனை தடுக்க டாஸ்மாக் அதிகாரிகள் அனைத்து டாஸ்மாக் மதுபான கடையின் முன்புறம் ஷெட்டரையொட்டி இரும்பு கம்பிகளை பொருத்தி வெல்டிங் வைக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து இன்று காலை முதல் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளின் முன்புறம் ஷெட்டரை திறக்க முடியாத அளவில் இரும்புக் கம்பிகளை பொருத்தி வெல்டிங் வைத்தனர். அப்போது சரியாக வெல்டிங் வைக்கப்படுகிறதா? என டாஸ்மாக் அதிகாரிகள் கண்காணிக்கவும் செய்தனர்.