தமிழ்நாடு தொல்லியல் துறையின் பயிற்சிப் பட்டறை.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை “தொல்லியல் ஓர் அறிமுகம்” என்னும் தலைப்பில் சென்னை, தருமபுரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் டிசம்பர் 2019 மற்றும் ஜனவரி 2020 மாதங்களில் தலா ஐந்து நாட்கள் பயிற்சிப் பட்டறை நடத்த திட்டமிட்டுள்ளது.
இப்பயிற்சியில் தொல்லியல், அகழாய்வு, கல்வெட்டு, நாணயவியல், வரலாற்றுச் சின்னங்கள் புனரமைப்பு, ஆவணப்படுத்துதல், நவீன தொழில் நுட்பங்களை கையாளுதல் போன்ற தலைப்புகளில் தொல்லியல் அறிஞர்களைக் கொண்டு பயிற்சி வகுப்பு மற்றும் கள ஆய்வு பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும், அருகிலுள்ள தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களுக்கு அழைத்துச் சென்று நேரடி களப்பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, விருப்பமுள்ள தொல்லியல் ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தகவல் தொழில் நுட்பத் துறையைச் சார்ந்தவர்கள் உட்பட அனைவரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி, கல்வித் தகுதி ஆகிய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ஆணையர்,
தொல்லியல் துறை,
தமிழ் வளர்ச்சி வளாகம்,
தமிழ்ச்சாலை, எழும்பூர்,
சென்னை-8
என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அல்லது tnsdaworkshop@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடலாம். மேலும் தொல்லியல் துறையின் இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 30.11.2019 மாலை 5.00 வரை வரவேற்கப்படுகின்றன.