சென்னை:-
ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் தடுப்பூசி தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதம் 30 முறை உருமாறியுள்ளதால், தடுப்பூசியை எதிர்க்கும் திறன் கொண்டதாக தகவல் கிடைத்திருக்கிறது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.
முதன்முதலில் இங்கிலாந்தில் ஆல்பா எனும் வேற்றுருவமும், அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா, இந்தியாவில் டெல்டா வேற்றுருவங்களும் கொரோனா வைரஸில் அறியப்பட்டன.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் உலக நாடுகள் தென்ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு ஏராளமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவும் தென்ஆப்பிரிக்கா, ஹாங்காங், இஸ்ரேல், போதட்ஸ்வானா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எச்சரிக்கை பட்டியல் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமான பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும், தேவைப்பட்டால் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
இந்நிலையில், கனடாவில் 2 பேருக்கு உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் கிருமி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் நைஜிரியாவில் இருந்து திரும்பிய பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 2 பேருக்கு ஓமைக்ரான் கிருமி தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
இதனிடையே மூன்றாவது அலை குறித்து இப்போதே பேசுவது கூடாது அதற்கான சூழலும் இந்தியாவில் இல்லை. ஆனால், மக்கள் மத்தியில் சில மாதங்களாக கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சரியாகப் பின்பற்றாமல் ஒருவிதமான கவனக்குறைவு தெரிகிறது.
இந்த நேரத்தில் கரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றை முறைப்படி செய்வது அவசியம் என்று ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.