பியூனெஸ் அயர்ஸ்:
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் ஜூவான் மாகாணத்தில் உள்ள போர்சிட்டோ நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தினால் வீடுகள்,கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் மற்றொரு நிலநடுக்கம் தாக்கியது அது ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவானது.இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ அல்லது யாரும் படுகாயமடைந்ததாகவோ உடனடி தகவல்கள் இல்லை. பொருள் சேதங்கள் குறித்த தகவல்களும் இல்லை.
இதற்கிடையில் அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போர்சிட்டோ அண்டை நாடான சிலியில் எல்லையையொட்டி அமைந்துள்ளதால் அங்கும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.சிலி தலைநகர் சாண்டியாகோவில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதையடுத்து மக்கள் வீதிகளுக்கு ஓடிவந்தனர்.எனினும் இந்த நிலநடுக்கத்தால் அங்கு எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என சிலி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.