ரஷ்யாவில், கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில், நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 40,000-ஐ தாண்டியுள்ளது.
இதன் மூலம்,தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.
இதனால் ரஷ்யாவில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்ட போதிலும், நோய் பரவல் குறைந்தபாடில்லை.
நாட்டில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அந்நாட்டு அரசு, மூத்த சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.