ப்யாங்யாங்:-
வடகொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜோங் உன் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வட கொரியாவின் கிழக்கு கடற்கரை நகரமான Hyangsan உள்ள மருத்துவமனை ஒன்றில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் Mount KumgangResort உள்ள வில்லா ஒன்றில் ஓய்வு எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன
கடந்த 11-ம் தேதிக்குப் பிறகு கிம் மக்கள் முன் தோன்றவில்லை. அவர் எங்கோ மறைந்திருக்கிறார் எனக் கூறப்பட்டது. கொரோனா தொற்று அச்சத்தால்தான் அவர் மறைந்திருக்கிறார் என்றும் பேசப்பட்டது. இதையொட்டி சில சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.
வட கொரியாவை நிறுவியவரும் கிம்மின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் Kim-IL-Sung பிறந்தநாளை ஏப்ரல் 15 அன்று தேசிய விழாவாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் இந்த விழாவில், இந்த ஆண்டு கிம் கலந்துகொள்ளவில்லை. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் பல குறுகிய தூர ஏவுகணைகள் அந்நாட்டு சார்பில் ஏவப்பட்டது.
ஏவுகணை லாஞ்ச், எப்போதும் கிம்மின் கண்காணிப்பிலேயே நடத்தப்படும். ஆனால், இந்த முறை கிம் இதில் கலந்துகொள்ளவில்லை. இதுபோன்ற சந்தேகங்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியது.
ஆனால், தற்போது கிம்முக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அவர் இருதய நோயால் அவதிப்படுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய செய்திகளை பிரத்யேகமாக வெளியிடும் டெய்லி என்.கே (Daily NK) நிறுவனம், இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் முதல் கிம் இருதயப் பிரச்னைகளுடன் போராடி வருகிறார் என்றும், அதைப் பொருட்படுத்தாமல் பலமுறை பேக்டு (Mount Paektu) மலைக்குச் சென்றுவந்ததால், அவரின் உடல்நிலை மோசமடைந்தது என்றும் அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும், அதிகமாக மது அருந்துதல், புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஏப்ரல் 11-ம் தேதி, ஆளும் தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோவின் (Politburo) கூட்டத்திற்குத் தலைமைதாங்கிய கிம், அதன் பிறகு மக்கள் முன் தோன்ற வில்லை அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் இல்லை.
கிம் ஜாங் உன்-க்கு பிறகு அவரது சகோதரி கிம் யோ ஜோங் (Kim-Yo-Jong) பொலிட்பீரோவின் தலைமை பொறுப்புக்கு வரலாம் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளிவருகிறது.
எனினும் கொரியாவிற்கு இடையிலான விவகாரங்களைக் கையாளும் தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம், இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தில் உறைந்துகிடக்க, ஒரே ஒரு நாடு மட்டும் அதுகுறித்த எந்த அலட்டலும் இல்லாமல் இருக்கிறது. அது வட கொரியாதான். இதுவரை அங்கு ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை என்று அந்நாடு சொல்லிவந்தாலும், அதை நம்ப எந்த நாடும் தயாராக இல்லை. காரணம் கொரோனா பாதித்தவர்களை வட கொரியா சுட்டுக்கொன்றிருக்கலாம் என்றும் பேச்சு அடிபட்டன. சீனாவுக்கு மிக நெருக்கமாக உள்ள வட கொரியாவில் எந்த கொரோனா பாதிப்பும் இல்லை என்றால், நம்ம முடியவில்லை என்று அந்நாட்டு விவகாரங்களை கையாண்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.