பெட்டியா:-
கொரோனா வைரஸ் பரவலுக்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping) தான் காரணம் என்று கூறி, மீது பிகார் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டம் பெட்டியாவில் உள்ள முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், வழக்கறிஞர் முராத் அலி என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரப்பியதாக சீன அதிபர் ஸி ஜின்பிங் மீதும், அதன் பரவல் குறித்த குறித்த தகவலை உலகிற்குத் தெரியாமல் மறைத்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் கிப்ரேசியஸ் மீதும் புகார் அளித்துள்ளார்.
இந்த மனுவானது வரும் 16-ஆம் தேதியன்று விசாரணைக்கு வரவுள்ளது.
அதோடு அவர் தனது புகார் மனுவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சாட்சிகளாக சேர்த்துள்ளார்.
ஜி ஸின்பிங் மற்றும் கிப்ரேசியஸ் ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 269, 270, 271, 302, 307, 500, 504 மற்றும் 120B இன் படி நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
மேலும், தனது புகாருக்கு ஆதராமாக அனைத்துவகை ஊடகங்கள், நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வந்த செய்திகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
பீகார் நீதி மன்றத்தில் சீன அதிபர் ஸி ஜிங்பிங் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது முதன் முறை அல்ல. கடந்த மார்ச் மாதம் முசாபர்பூரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் சீன அதிபர் ஸி ஜிங்பிங் மற்றும் இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டோங் (Sun Weidong) மீது கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் என்று கூறி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.