தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சி பொறுப்பில் இருந்த அதிமுக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 69 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளன.
இதனையடுத்து கடந்த 7 ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் யார் என்று தேர்ந்தெடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. பின்னர் அந்த கூட்டத்தில், யார் எதிர்க்கட்சி தலைவர் என்று தேர்ந்தெடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. மேலும் முடிவுகள் எட்டப்படமால் அந்த கூட்டம் நிறைவு பெற்றது.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ கூட்டம் நடைபெற்று வருகிறது. நாளை சட்டமன்ற கூடவுள்ளதால் இன்று எதிர்க்கட்சி தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமான ஒன்று.
இந்நிலையில் கடந்த 3 மணிநேரமாக நடைபெற்ற கூட்டம் தற்போது நிறைவுபெற்றது. கூட்டத்தின் முடிவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.