அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
கடந்த ஆண்டு கிராம சபை கூட்டம் கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில், வரும் அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று, கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டத்தை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. கிராம சபை கூட்டங்களை திறந்தவெளியில் நடத்த வேண்டும். கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடைவெளியுடன் இருக்குமாறு இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும்.
கூட்டம் நடத்துவதற்கு முன் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது. கூட்டத்தை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள் முடிக்க வேண்டும். உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. சா.கற்பகவிக்னேஷ்வரன்