கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடுபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழையால் பேரணாம்பட்டு நகரில் ஓடும் கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து அருகில் உள்ள தெருக்களில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் மசூதிகளில் தஞ்சமடைந்தனர்.
பேரணாம்பட்டு அஜிஜியா தெருவில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பலர் அக்கம்பக்கம் இருந்த மாடி வீடுகளில் தங்கினர். இதில், அனிஷா பேகம் (63) என்பவரது வீட்டில் மழையால் பாதிக்கப்பட்ட அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் தங்கினர். அந்த வீட்டில் சுமார் 18 பேர் தங்கினர்.
சுமார் 50 ஆண்டுகள் பழமையான அந்த வீடு இன்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரென இடிந்து விழுந்தது. இதனையடுத்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. இ
டிபாடுகளில் இருந்து முகமது கவுசிப், முகமது தவுசிக், சன்னு அஹ்மது, அபிப் ஆலம், இலியாஸ் அஹ்மது, ஹாஜிரா, நாசிரா, ஹாஜிரா நிகாத், மொய்தீன் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களில் ஹாஜிரா நிகாத், மொய்தீன் ஆகியோர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே ஹபிரா (4), மனுலா (8), தமீத் (2), ஹப்ரா (3), மிஸ்பா பாத்திமா (22), அனிஷா பேகம் (63), ரூஹிநாஸ் (27), கவுசர் (45), தன்ஷிலா (27) ஆகியோர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேரணாம்பட்டு நகருக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்த ஆட்சியர், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
வீடு இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.