பாகூர்:-
புதுச்சேரி, தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தை சேர்ந்தவர் சிவக்குமார். மீனவரான இவர் நேற்று அதிகாலை தனது பைபர் படகில், அதே பகுதியை சேர்ந்த 3 பேருடன், மீன் பிடிக்க கடலுக்கு சென்றார்.
இரண்டு நாட்டிக்கல் கடல் தூரத்தில், நான்கு பேரும் வலையை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, 3 வயதுள்ள பெண் புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் வலையில் சிக்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த மீனவர்கள் வலையில் சிக்கிய மானுடன் கரைக்கு திருப்பினர்.
இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசாருக்கும், வனத்துறை மற்றும் மீன் வளத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக, வனத்துறை அதிகாரி வஞ்சுளவள்ளி மற்றும் அதிகாரிகள் புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்று, மீன்பிடி வலையில் சிக்கிய மானை பார்வையிட்டு, மீனவர்களிடம் விசாரணை நடத் தினர். பின், வனத்துறை அதிகாரிகள், மானை கைப்பற்றி வனத்துறை அலுவலகம் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுதொடர்பாக, கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யாரேனும் மானை கடத்தி கடல் வழியாக கொண்டு சென்றபோது கடலில் விழுந்து உயிரிழந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.