தமிழகத்தில் பல்வேறு சூழ்நிலையிலும் மக்களுக்கு எதிரான பிரச்சனைகளில் தனது போராட்டத்தின் மூலம் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர் டிராஃபிக் ராமசாமி. பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர்.
இவருக்கு அண்மையில் உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் மறைவுக்கு திரை பிரபலங்கள் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் டிராஃபிக் ராமசாமியின் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”சமுதாயத்தின் மீது அக்கறையும், நீதித்துறையின் மீது நம்பிக்கையும் கொண்டு சமுதாயத்தில் நிகழும் தவறான செயல்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவரின் குரல் ஓய்ந்துவிட்டது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.