புதுச்சேரி திருக்கனூர், சந்தை புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் வாழை, கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறி வகைகளை பயிரிட்டு வருகின்றனர். இங்கு, பயிரிட்டு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்வர்.
இந்நிலையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கிராமப்புறங்களில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள காய் வாழைத்தார்கள் மற்றும் இலைகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
ஆனால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வியாபாரிகள் யாரும் தோட்டத்திற்கு வராததால், பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாழை தோட்டம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மேலும் நஷ்டத்தை அடைய மனமின்றி, பல ஏக்கர் பரப்பில் பயிரிட்ட வாழை தோட்டங்களை டிராக்டர் இயந்திரம் மூலம் அழித்து, நிலத்திலேயே உரமாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மாற்று பயிர் செய்ய அரசு மானியம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.