ராஞ்சி:-
ரத்தப் போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவரை மத ரீதியாக நிந்தித்து தரையில் வழிந்த ரத்தத்தைத் துடைக்கச் சொல்லி கொடுமைப்படுத்தி செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் சேர்ந்தவர் ரிஸ்வான் கதூன் (30) (Riswan Khatun). கர்ப்பிணியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்தப் போக்கு காரணமாக ஜாம்ஷெட்பூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (Mahathma Gandhi Memorial Medical College Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு வழிந்த ரத்தத்தை துடைக்க சொல்லி நிர்பந்தித்து உள்ளனர். இவ்வாறு இரத்தம் மூலமாக கொரோனா வைரஸை பரப்புகிறீர்கள் என்று மத ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். மேலும் ரத்தத்தை துடைக்க சொல்லி செருப்பால் தாக்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்மணி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண்மணி இந்த செயலில் ஈடுபட்ட எம்ஜிஎம் மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு (Hemant Soren) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
உடனடியாக ஜாம்ஷெட்பூர் காவல்துறை மூத்த மாவட்ட கண்காணிப்பாளர் மூன்று நபர் சிறப்பு குழு ஒன்றை அமைத்து 48 மணி நேரத்தில் இந்த சம்பவம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து எம்ஜிஎம் மருத்துவமனை துணை கண்காணிப்பாளர், மாவட்ட நிர்வாக மூத்த மேஜிஸ்ட்ரேட் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் என மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கூறிய ஜார்கண்ட் தலைமைச் செயலாளர் சுகதேவ் சிங்:-
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.