அல்மோரா:-
உத்தர்காண்ட் மாநிலத்தில் விவசாயி ஒருவர், 7 அடி 1 அங்குல (2.16 மீ) உயரத்தில் கொத்தமல்லி செடியை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
உத்தர்காண்ட் அல்மோரா (Almora) மாவட்டத்தில் ராணிகெட் (Ranikhet) பகுதியை சேர்ந்த விவசாயி கோபால் உப்ரேதி (Gopal Upreti) என்பவர், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று உயரமான கொத்தமல்லி செடியை வளர்த்துள்ளார்.இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் கின்னஸ் குழுவிற்கு விவசாயி உப்ரேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதையடுத்து, அல்மோரா மாவட்ட தலைமை தோட்டக்கலை அதிகாரி T.N.பாண்டே மற்றும் ராணிகெட் மஜ்காலியிலுள்ள உத்தர்கண்ட் மாநில வேளாண் துறை (Uttarakhand Organic Board Ranikhet Majkhali) அதிகாரி தேவேந்திர சிங் நெகி மற்றும் பில்லேக் ராம் சிங் நெகி உள்ளிட்ட அதிகாரிகள் கொத்தமல்லி செடியின் உயரத்தைப் பதிவு செய்து அவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதற்கு முன்னர் 5 அடி 9 அங்குல உயர கொத்தமல்லி செடி இடம்பெற்றது குறிப்பிடதக்கது.
இது குறித்து விவசாயி உப்ரெதி கூறுகையில்:-
கடந்த ஆண்டு அக்டோபரில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் கொத்தமல்லி வளர்க்கத் தொடங்கியதாகவும், மகசூல் அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.
கொத்தமல்லியை தவிர, விவசாயி உப்ரேதி மஞ்சள், ஆப்பிள், அவகேடோ, பீச், ஆப்ரிகேட் மற்றும் பிற காய்கறிகளை வளர்த்து வருகிறார்.
கொரோனா தொற்று நோய்க்குப் பிறகு பூச்சிக்கொல்லி இல்லாத பொருட்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால், கரிம வேளாண்மையில் கவனம் செலுத்துமாறு சக விவசாயிகளை உப்ரேதி கேட்டுக்கொண்டார்.