16வது சட்ட பேரவையின் முதல் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு போட்டியின்றி தேர்வானார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் துணை சபாநாயகராக கீழ் பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு. பிச்சாண்டி தேர்வானார்.
இந்நிலையில் இன்று அப்பாவு சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார். அதனையடுத்து சபாநாயகருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில் ’’சட்டப்பேரவையில் சபாநாயகரின் கண் அசைவிற்கு கட்டுப்பட்டு செயல்படுவோம். ஊடக விவாதங்களில் கருத்தோடும் சுவையோடும் பேசும் உங்களை கவனிப்போரில் நானும் ஒருவன்.
சபாநாயகராக அப்பாவு அமர்ந்திருப்பதை பார்க்கும்போது என் நெஞ்சம் பூரிப்படைந்துள்ளது. சுதந்திரத்தின் அடையாளமான நீங்கள் பேரவையில் அமர்ந்துள்ளீர்கள். அண்ணாவின் தம்பிகளாகிய எங்களுக்கு ஆணவம் இருக்காது; கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் அவையை நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ எனக் கூறியுள்ளார்.