தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக கட்சி தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
அந்த வகையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக பாஜகவிற்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் நின்று சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ”அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுகிறது. அதிமுகவில் சசிகலா என்னை அறிமுகப்படுத்தியதால் என்னைப் புறந்தள்ளிவிட்டார்கள். சீட்டு கேட்கும் அளவிற்கு மானம்கெட்டுப் போகவில்லை. அதிமுக தோல்விக்கு வேலை செய்வோம்” என்றார்.