தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி பதவியேற்கவுள்ளர். இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞர் வைரமுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,
‘கலைஞர் திருமகனே, கண்ணனுக்கு இனியவனே, நிலம் போல் பொறுமை கண்டாய்… நீர் போல் எளிமை கொண்டாய்… தீயாய் எழுந்து நின்றாய்… காற்றாய் பயணமுற்றாய்… அதனால்தான் வான்போல் வளர்ந்து நிற்கிறாய்… உன் வெற்றி புறவழிப்பட்டதல்ல… அறவழிப்பட்டது… அதனால்தான் நினைவிடத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து கண்ணாடி கழற்றி கண் துடைக்கிறார் கலைஞர்… இனி இனமொழியை மீட்டெடுக்கும் உனது கரம்… எழுதுகோலில் பட்டெடுக்கும் எனது குலம்” எனக் கூறியுள்ளார்.