சென்னை :
பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.வழக்கமாக பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்தப்படும். அதில் 210 வேலைநாட்கள் இருக்கும். கொரோனா காரணமாக கடந்த கல்வி ஆண்டில் வகுப்புகளை நடத்த முடியவில்லை. ஆன்லைன் மூலம் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்பட்டது.
இறுதியில் தேர்வு இல்லாமலேயே மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 2021- 22 கல்வியாண்டிலும் முழுமையாக வகுப்புகளை நடத்த முடியாமல்,3 மாதங்கள் கடந்துவிட்டது . மாணவர்களுக்கு அதற்கான பாடங்களை நடத்த முடியாததால் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் கற்பிக்க வேண்டும்.
எனவே பள்ளிகள் திறக்கப்பட்டதும் அவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் எவ்வாறு புத்தாக்க வகுப்புகளை நடத்த வேண்டும் என்று திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.அனைத்து தலைமை கல்வி அதிகாரிகளும் இதை கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.
பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும். போட்டி தேர்வுகளுக்கு இதை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களே தன்னிச்சையாக தயாராகி கொள்ள வேண்டும்.புத்தாக்க பயிற்சி, மாணவர்கள் பயில்கின்ற வகுப்புக்கு முந்தைய 2 வகுப்புகளின் பாடங்களின் அடிப்படையில் 45-60 நாட்களுக்கு கற்றுத்தரப்படும். பயிற்சி நிறைவு பெற்றவுடன் அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.