நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள கால்நடை சந்தை நெல்லை மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் பெரிய சந்தையாகும் . இங்கு ஆடு, மாடு ஆகியவை பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாரத்தில் செவ்வாய் கிழமை மட்டும் ஆட்டுச் சந்தை நடைபெறும். வாரந்தோறும் சந்தை பரபரப்பாக செயல்படும் நிலையில் வியாபாரிகள் , விற்பனையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாரந்தோறும் சந்தையில் கூடுவது வழக்கம்.
இந்த சந்தையில் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் நடைபெறும் . கடந்த ஆண்டு கொரோனா பரவலை தொடர்ந்து 7 மாதங்கள் சந்தைகள் மூடப்பட்டு பின்னர் ஊரடங்கு தளர்வுக்கு பின் சந்தை மீண்டும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது . நெல்லையில் கொரோனா தாக்கத்திற்கு தினமும் 400 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியாகி வருகின்றனர் .
கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் அரசு சார்பில் மீண்டும் ஊரடங்கு சில விதிமுறைகளுடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாரநாட்களில் இரவு நேர ஊரடங்கு , ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு , கோவில் வழிபாட்டுக்கு தடை , திரையரங்கம் , மால் ஆகியவை மூடல் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து நெல்லை மேலப்பாளையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கால்நடைச் சந்தை கூடும், இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு அரசின் ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று சந்தை நடக்க உள்ள நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கால்நடைச் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் அங்கு சந்தை மூடப்பட்டதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அரசின் மறு உத்தரவு வரும் வரை கால்நடைச்சந்தை மூடியிருக்கும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. பரபரப்பாக செயல்படும் சந்தை மூடப்பட்டதைத் தொடர்ந்து வியாபாரிகள் , விற்பனையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.