புதுச்சேரியில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளையும் திடீரென அதிகாரிகள் மூட சொன்னதால் வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மாநில நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மதுபான கடைகளை தவிர மற்ற அத்தியாவசிய கடைகள் மதியம் இரண்டு மணி வரை திறந்திருக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை நேரு வீதி, கொசக்கடை வீதி உள்ளிட்ட கடை வீதிகளுக்கு வந்த நகராட்சி அதிகாரிகள் அனைத்து கடைகளும் உடனடியாக மூட வேண்டும் என கோரியும், மேலும் திறந்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மற்றும் அதிகாரிகள் வியாபாரிகளை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து புதுச்சேரி முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. திடீர் திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி கடைகளை அதிகாரிகள் அடைக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றும், முன்னறிவிப்பு வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.