தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்து பிரேசில் நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இழந்த பணத்தை மீட்டுக் கொடுக்க கோரியும் நெல்லை ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.
மனுவில் கூறியுள்ளதாவது,”நெல்லையைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் பிரேசில் நாட்டிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்ததைத் தொடர்ந்து சுமார் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 450 க்கும் மேற்பட்டவர்கள் நபர் ஒருவருக்கு இரண்டு லட்சம் வீதம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் அவர் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதில் பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் பலமுறை காவல்துறையினரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தவர்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 450 க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் வெளிநாடு செல்வதற்காக கட்டிய பணத்தை மீட்டு தர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.