திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் 16 க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. குளிப்பட்டி காட்டுப்பட்டி மாவடப்பு கோடந்தூர் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் திருமூர்த்தி மலை அடிவாரப் பகுதி வழியாக காட்டு பகுதியில் நடந்து சென்று தங்கள் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது இங்கு ஏராளமான இளைஞர்கள் உள்ளனர்.
இவர்கள் தினமும் திருமூர்த்தி மலை மற்றும் உடுமலை நகர பகுதிகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஒரு சில இளைஞர்கள் தினமும் அதிகளவில் மது பாட்டில்களையும் வாங்கி செல்கின்றனர். இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
மேலும் அந்த இளைஞர்கள் மது குடித்துவிட்டு போதையில் அங்கு உள்ள வன விலங்குகளை வேட்டையாடுவது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இவர்கள் செய்வது வெளியுலகிற்கு தெரியாமல் இருந்து வந்தது. மேலும் வனத்துறை அதிகாரிகள் கூட பயந்து இவர்கள் செய்வதை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பத்துக்கு மேற்பட்ட மலைவாழ் கிராம இளைஞர்கள் யானைகளை தேடிச்சென்று கல்லை விட்டு எறிந்து கொடுமைப்படுத்தியும், காயப்படுத்தியும், வருகின்றனர். அதில் குட்டி யானைகளை அதிகளவில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர்கள் யானைகளை துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் யானையை இளைஞர்கள் மீது வனத்துறை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது இங்கு உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுப்பியுள்ளது. வனத்தில் வாழும் மலைவாழ் மக்கள் வனவிலங்குகளை தங்களது தெய்வம் போல் காத்து வரும் நிலையில் இது போன்ற ஒருசில மலைவாழ் கிராம இளைஞர்களால் ஒட்டுமொத்த வனத்தில் வாழும் மக்களுக்கும் பெரிய அவமரியாதையை கொடுத்துள்ளனர். வனவிலங்குகளை கொடுமைப்படுத்தும் இது போன்ற இளைஞர்களை உடனடியாகக் கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.