கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது மிக வேகமாக தமிழகத்தில் பரவி வரும் நிலையில் நேற்றிலிருந்து இரவு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டதுடன் அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து இயங்கவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் பகலில் இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இரவு 10 மணிக்குள் குறித்த இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டு இன்று இயக்கப்பட்டன. இருந்தபோதிலும் பெரும்பான்மையான பயணிகள் பகலில் பயணம் செய்ய விரும்பாததால் பேருந்துகளை சில நபர்களுடன் இயக்கும் சூழ்நிலைக்கு போக்குவரத்து ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கூறிய கோயம்புத்தூர் அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் பகலில் பேருந்துகளை இயக்கவும் சிரமம். இந்த வெயில் காலத்தில் மக்கள் யாரும் பகலில் பயணம் செய்வதை விரும்ப மாட்டார்கள். சில பயணிகளை மட்டும் வைத்து பேருந்து இயக்குவது டீசல் செலவுக்கு கூட பணம் போதாத நிலையில் உள்ளது எனவும் கூறினார். மேலும் இரவில் மட்டும் தான் கொரோனா பரவுமா பகலில் என்ன கொரோனவிற்கு விடுமுறை விடப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.