சேரன் இயக்கத்தில் பார்த்திபன், முரளி நடித்த வெற்றிக்கொடி கட்டு படத்தில் ஒட்டக பாலில் டீ போட சொல்லும் வடிவேலு காமெடி பிரபலம். ஒட்டக பால் டீ வேணுமா?? அதுக்கு நீங்க துபாய்க்கோ, சவூதிக்கோ இல்லை ராஜஸ்தானுக்கோ போகவேண்டியதில்லை. நம்ம சேலத்திலேயே ஒட்டகப்பால் விற்பனை சக்கை போடு போடுகிறது.
ஆம், சேலத்தில் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அருண் (35) பிரபாகரன் (33) நிஜமாகவே ஒட்டக பாலில் டீ, காபி வழங்கி அசத்தி வருகின்றனர் . கோரிமேடு, என்.ஜி.ஓ.,காலனி பகுதியில் உள்ள ‘சைலம்’ உணவகத்தில்,ஒட்டகபால் டீ, காபியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
டீ 60 ரூபாய், காபி 65 ரூபாய், மில்க் ஷேக் 140 ரூபாய், சாக்லேட் 75 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஒட்டகப் பால் லிட்டர், 899 ரூபாய்க்கும், அரை லிட்டர், 450 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். மேலும், ஒட்டக பாலில் மில்க் ஷேக், சாக்லேட் உள்ளிட்டவை தயாரித்து வருகிறோம்.
ஒட்டகப் பாலில் அதிக சத்துக்கள், எளிதில் ஜீரணமாகும் தன்மை உள்ளதால், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வாங்க துவங்கினோம். கொரோனா தளர்வுக்கு பின், ராஜஸ்தானில் உள்ள ஒரு பண்ணையில் கறந்த ஒட்டக பாலை உடனடியாக குளிரூட்டி, 48 மணி நேரத்தில் சேலம் வந்துவிடும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்.
அதுமட்டுமல்லாமல் மாட்டுப் பாலை விட, கெட்டித்தன்மை கொண்டதாகவும், சிறிது உப்பு சுவை கூடுதலாகவும் இருக்கும். மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. மேலும், குழந்தைகளும் விரும்பி குடிப்பதால் விற்பனை அதிகரித்து வருகிறது அவர்கள் கூறினர்.