வெல்லிங்டன்:-
நியூசிலாந்து நாட்டில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலுமாக நீங்கிவிட்டதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் குணம் பெற்று வீடு திரும்பியதால், அந்நாட்டில் கொரோனா ஆக்டிவ் கேஸ் பூஜ்ஜியம் ஆன காரணத்தால் கொரோனா பாதிப்பு முழுவதும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் கொரோனா தொற்றால் மொத்தம் ஆயிரத்து 504 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை காட்டிலும், நோய் பாதிப்பை முற்றிலும் ஒழிப்பதை நோக்கமாக கொண்டு 7 வார காலம் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 17 நாட்களாக புதிதாக யாருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட வில்லை.
இறுதியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த நபர் குறித்த விவரங்கள், பாதுகாப்பு காரணமாக வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் 50 வயது மதிக்கத்தக்க பெண் என்றும், ஆக்லாண்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நியூசிலாந்தின் பிரதமர் ஜாசிந்தா அர்டெர்ன், வைரஸ் தொற்றால் போடப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜாசிந்தா அர்டெர்ன் கூறியதாவது:-
கடந்த சில வாரங்களாக நியூசிலாந்து மக்கள் செய்த தியாகத்தால்தான் இந்தப் போராட்டத்தில் வெற்றி காண முடிந்தது. ஆக்டிவ் கேஸ் பூஜ்ஜியம் என்ற செய்தி வந்தவுடன் என் குழந்தையோடு நான் நடமாடி அதைக் கொண்டாடினேன்.
எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் நியூசிலாந்தின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெரும். தற்போதைக்கு உலக அளவில் அதிக தளர்வுகள் அளித்துள்ள நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று எனக் கூறியுள்ளார்.
தற்போது தளர்த்திய கட்டுப்பாடுகள் மூலம் நைட் க்ளப் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகள் திறக்கப்படும். சினிமா தியேட்டர்களும் மீண்டும் திறக்கப்படும். அதேபோல அனைத்து விளையாட்டுத் தொடர்களும் எந்தவித கட்டுப்பாடுமின்றி நடக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.