வாஷிங்டன்:-
அமெரிக்க காவல்துறையால் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை உலகிற்கே காட்டிய 18 வயது இளம்பெண்ணுக்கு பெருமைமிக்க ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்டது உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
டெரிக் சாவின் என்ற காவல் அதிகாரி ஃபிளாய்டின் கழுத்தில் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில் அவர் உயிரிழந்தார்.
இதனிடையே ஜார்ஜ் காவல் துறையால் உயிரிழந்ததை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண். அப்போது அவருக்கு வயது 17.
ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய மிக முக்கிய காரணம் அந்த வீடியோ தான். உலகம் முழுவதும் பரவிய வீடியோவால் பலரும் காவல் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது.
அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுதும் பெரும் போராட்டங்களும், இங்கிலாந்து உளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பெரும் வன்முறையும் வெடித்தது.
ஜார்ஜ் உயிரிழக்க காரணமான போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார். வழக்கு விசாரணை முடிந்து தண்டனையும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அந்த வீடியோவை பதிவு செய்த இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு உயரிய புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதை போல ஊடக, புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருது ‘புலிட்சர்’ விருது.
அமெரிக்கா பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912ம் ஆண்டு முதல் பத்திரிக்கை, இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம், ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.