பனஸ்கந்தா:-
கொரோனா பரவலை தடுப்பதற்காக இளைஞர் ஒருவர் தனது நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் சுய்கம் தாலுக்கா நாதேஸ்வரி அருகே பவானி அம்மன் கோயிலில் சில தொழிலாளர்கள் சிற்பம் செதுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களில் மத்திய பிரதேச மாநிலம் மொனிரா மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் ஷர்மா (24) தனது சகோதரருடன் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பவானியம்மன் கோயில் சிற்பம் செதுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பல தொழிலாளர்கள் வேலை இழந்து திண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை விவேக் சர்மா தனது சக தொழிலாளர்களிடம் தான் சந்தைக்கு சென்று வருவதாக கூறி உள்ளார். ஆனால் அவர் நேராக பவானி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு வந்து கோயில் பூசாரி விவேக் நாக்கு அறுபட்ட நிலையில் கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விவேக் வருவதற்கு வெகு நேரமானதால் அவரது சகோதரர் அவரது மொபைல் எண்ணிற்கு அழைத்துள்ளார். அப்போது வேறு ஒருவர் மொபைலை எடுத்து பேசியுள்ளார் அவர் விவேக் ஷர்மா தனது நாக்கை அறுத்துக் கொண்டதை கூறியுள்ளார்.
இதுகுறித்து கூறிய சக தொழிலாளர்கள் விவேக் ஷர்மா காளிதேவியின் தீவிர பக்தர். அடிக்கடி காளி நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார். ஒருவேளை இவர் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டு தனது நாக்கை அறுத்து காணிக்கை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தற்பொழுது விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நாக்கை மீண்டும் ஒட்ட வைப்பதற்கான முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.