வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் கட்சியின் பொதுச்செயலாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான துரைமுருகன் போட்டியிடுகிறார். துரைமுருகனை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ராமு களமிறங்கியிருக்கிறார். இத்தொகுதியில் பதிவான வாக்குகள் காட்பாடியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மே 2-ம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்த நிலையில், தி.மு.க வேட்பாளர் துரைமுருகனும், அவரின் மகன் கதிர் ஆனந்தும் சேர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க-வின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் புகார் மனு அளித்துள்ளார்.
புகார் மனுவில், ‘‘காட்பாடி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரின் வெற்றி மிகப் பிரகாசமாக இருக்கிறது. இதனால், வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை ஏற்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் அல்லது வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்த வேண்டும் என்று தி.மு.க வேட்பாளர் துரைமுருகன் மற்றும் அவரின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் தங்கள் ஆதரவாளர்களிடம் பேசியிருப்பதாக உறுதிப்பட தகவல்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
அ.தி.மு.க வேட்பாளரின் வெற்றியை எக்காரணத்தைக் கொண்டும் தட்டிப்பறித்து விடக்கூடாது. எந்த விதமான அசம்பாவிதமும் அங்கு நடந்து விடக்கூடாது.எனவே, மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்களை கூடுதலாக காட்பாடி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.முகவர்கள் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் மீறி வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்கிற அறிவிப்பை தேர்தல் ஆணையம் உடனடியாக வெளியிட வேண்டும்’’,என குறிப்பிட்டுள்ளார்.