கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று முதல் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.
அதன்படி மருந்துக்கடைகள் பால் விநியோக கடைகள், பெட்ரோல் பங்க் தவிர்த்து இதர கடைகள் அனைத்தும் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது. பேருந்துகளிலும் ரயில்களிலும் 50 சதவிகிதம் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மானாவாரி சாகுபடி பகுதிகளான சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பகுதிகளிலும் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாகுபடி பணிகள் தீவிரமடைந்து வருகிறது. அதற்கு உரங்கள், பூச்சிமருந்துகள் மற்றும் விதைகள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.
எனவே ஊரடங்கு காலங்களிலும் விவசாய உற்பத்தியை கருத்தில் கொண்டு பிற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைப் போல உரங்கள், பூச்சிமருந்துகள் மற்றும் விதைகள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் காலை 06.00 மணி முதல் பகல் 12.00 வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உட்பட அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் விவசாயிகளும், விற்பனையாளர்களும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.