ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் பேயாக நடித்திருந்த அலெக்சாண்டாரா ஜாவி கோவாவில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு காஞ்சனா 3 படம் வெளியானது. தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு என 4 மொழிகளில் வெளியான இப்படத்தில் நடிகைகள் ஓவியா, வேதிகா நிக்கி தம்போலி ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும், ரஷ்யாவை சேர்ந்த மாடலும், நடிகையுமான அலெக்சாண்ட்ரா ஜாவி ரோசி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் 24 வயதாகும் ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா ஜாவி கோவாவில் நார்த் கோவன் எனும் கிராமத்தில் தனது ஆண் நண்பருடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா ஜாவி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ராவின் ஆண் நண்பர் அவரை விட்டு பிரிந்து சென்றதாகவும், இதன் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு புகைப்படக் கலைஞர் ஒருவர் மீது சென்னை காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்திருந்தார் அலெக்சாண்ட்ரா. அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த புகைப்படக் கலைஞரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.