விசாகப்பட்டினம்:-
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பன்னாட்டு ரசாயன ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

விசாகப்பட்டினத்தின் கோபால்பட்டிணம் அருகே ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற ரசாயன எரிவாயு ஆலை உள்ளது. ஊரடங்கு காரணமாக இந்த ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆலையிலிருந்து ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது இதனால் அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். இதன் பாதிப்பு 1 முதல் 1.5 கி.மீ. தொலைவுக்கு ஏற்பட்டு உள்ளது. வாயு பரவல் 2 முதல் 2.5 கி.மீ. தொலைவு வரை சென்றுள்ளது. கிராமத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட, 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோபால்பட்டினத்தில் எல்ஜி பாலிமர்களில் எரிவாயு கசிவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்து யாரும் வீடுகளைவிட்டு வெளியில் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாகப்பட்டின மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த விபத்து ஏற்பட்டவுடன் மக்களுக்கு பலர் உதவியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ குறுக்கும் நெடுக்குமாக ஓடினார்கள். பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்சில் ஏற்றிம், சுவாச கோளாறு உள்ளவர்களை தங்கள் தோளில் சுமந்துகொண்டு மீட்டு சென்றனர்.

1961 ஆம் ஆண்டில் இந்துஸ்தான் பாலிமர்ஸ் என இருந்த நிறுவனத்தைத் தென் கொரியாவின் எல்ஜி செம் கைப்பற்றிய பின் இது 1997 ஆம் ஆண்டில் எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா என்கிற பெயரில் இயங்கத் தொடங்கியது. பாலிஸ்டிரீனை உருவாக்கும் இந்த நிறுவனமானது பல்துறை பிளாஸ்டிக் உபகரணங்களை தயாரிக்கிறது.