தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையில் திமுக வெற்றிபெற்றது. அதனையடுத்து நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக மு.க ஸ்டாலின் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அதனுடன் அமைச்சர்கள் பெயர் பட்டியல் அடங்கிய பெயர் பட்டியலையும் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்வில் திமுக செயலாளர் துரைமுருகன் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ராஜ்யசபா உறுப்பினர் டி.ஆர் பாலு மற்றும் கே.என் நேரு ஆகியோர் உடன் இருந்தனர்.
அதன் பின்னர் ஆளுநர் மளிகை வாசலில் செய்தியாளர்களை சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி,”நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த சட்டமன்ற உறுப்பினருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தளபதி ஸ்டாலின் அவர்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து ஆளுநர் பன்வாரில் லால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கினோம், அதற்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து ஆலோசனை செய்து விட்டு இன்று மாலைக்குள் ஆட்சி அமைக்க அழைப்பு விடுவதாகவும் கூறியுள்ளார் என்றார்.
மேலும் திமுக தரப்பில் இருந்து ஆட்சி அமைக்க எந்த தேதியில் கோரப்படவில்லை. ஆளுநர் அழைக்கும் நாளிலேயே ஆட்சி அமைக்க இருப்பதாகவும் கூறினார். அமைச்சர்கள் நியமனம் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அதனைப் பற்றி தலைவர் தளபதி ஸ்டாலின் தான் முடிவு செய்வார் எனக் கூறினார்.