சலூன் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சலூன் கடை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் கூடிய பொது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்தின் அபாயத்தை உணர்ந்த தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள பெரிய பெரிய வணிக வளாகங்கள் சலூன் கடைகளை அடைக்க உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சலூன் கடைகள் அடைக்கப்பட்டதால் அதை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள தடை உத்தரவின் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வறுமைக்கோட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு உரிய கட்டுப்பாடுடன் கூடிய விதிமுறைகளை பின்பற்றி கடைகளை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். குறைந்த பட்சம் ஐந்து மணி நேரமாவது தங்களை தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் அரசு விதித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றி தங்கள் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் சலூன் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் 500 முதல் 1000 ரூபாய் அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.