தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன.
அந்தவகையில் திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவிற்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதியும் , மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதியும், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதியும், மதிமுகவிற்கு 6 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது நடந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு எட்டியுள்ளது. அதன்படி தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது திமுக. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டனர்.