மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரைக்கு கள்ளழகர் வேடமிட்டு வரும் சுந்தரராஜ பெருமாள் சித்ரா பௌர்ணமி நாளில் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு என்பது மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக நடைபெறும்.
இந்த விழாவானது நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் வரும் 27ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் கோவில் வளாகத்தில் உள்ள ஆடிவீதியலயே உள்திருவிழாவாக கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வை நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக இந்த ஆண்டு கோவில் வளாகத்திலேயே வைகையாறு போல செயற்கையான வைகை ஆற்றை உருவாக்கி அதில் வைகை ஆற்று நீரை நிரப்பி அதில் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளுவது போன்ற நிகழ்வை நிகழ்த்திகாட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வான தேனூர் மண்டபம் போன்ற செயற்கை அமைப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் கோவில் வளாகத்தில் நடைபெறும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு அழகர் கோவில் யூடியூப் பக்கத்திலும் தொலைக்காட்சிகளிலும் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.