கொரோனா பாதித்த நோயாளிகள் தங்கியிருந்த அறைகளில், காற்றில் வைரஸ் கிருமிகள் இருந்ததை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று காற்று மூலம் பரவக் கூடும் என்றும் அதன் நோய்த்தொற்று சில மணி நேரங்கள் காற்றில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 2 லட்சம் பேர் இந்த நோய் தாக்கத்திலிருந்து மீண்டு உள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் நெப்ராஸ்கா (Nebraska) பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில், வைரஸ் பாதித்த நபர்கள் தங்கியிருந்த அறைகளில் நடத்தப்பட்ட சோதனையில் காற்றில் கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு ஆடைகளிலும் வைரசின் தாக்கம் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் நோயாளிகளின் அருகில் மட்டுமல்லாது மருத்துவமனையில் வெளிப்புறங்களில் வைரஸ் தொற்று பரவி உள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் காற்றின் மூலமாக பரவுகிறதா இல்லையா என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும் நெப்ராஸ்கா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மற்ற ஆய்வாளர்களால் வைரஸ் தொற்று காற்றின் மூலம் பரவும் என்று உறுதிப்படுத்தப்படவில்லை. மேற்கண்ட ஆய்வு 11 நோயாளிகள் தங்கி இருந்த அறைகளில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.