இஸ்தான்புல்:-
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள ஹாகியா சோப்பியா என்ற புராதான கட்டிடத்தை மீண்டும் மசூதியாக மாற்ற துருக்கி அரசு முடிவு செய்துள்ளது. துருக்கி அரசின் இந்த முடிவு வேதனை அளிப்பதாக போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200714-WA0023.jpg)
கிட்டதட்ட 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் பொது.ஆ. 537-ம் (537 CE) ஆண்டு பைசாண்டிய பேரரசர் (Byzandian Emperor) முதலாம் ஜஸ்டீனியன் (Justinian I) காலத்தில் இஸ்தான்புல்லில் ஹாகியா சோபியா ஒரு கிறிஸ்தவ தேவாலயாமாக (Cathedral) கட்டப்பட்டது. பின்னர் 1453ம் ஆண்டு ஓட்டோமான் பேரரசு இஸ்தான்புல் மீது படையெடுத்து வெற்றி கொண்ட பின்னர் ஹாகியா சோப்பியா மசூதியாக மாற்றப்பட்டது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200714-WA0031.jpg)
இதனையடுத்து 1934ம் ஆண்டு துர்க்கிய குடியரசின் தந்தையான முஸ்தபா கெமல் அடதுர்க் (Mustafa Kemal Ataturk) ஆட்சியின் கீழ் ஒரு அருங்காட்சியமாக மாறியது. துருக்கியை மதசார்ப்பற்ற நாடாக மாற்றும் முயற்சி மேற்கொண்டவர் முஸ்தபா கெமல். அதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200714-WA0026.jpg)
இதனையடுத்து ஹாகியா சோப்பியா உலகின் மிக பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக அமைந்தது. ஆண்டிற்கு அங்கு சுமார் 37 லட்ச சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றார்கள்.
இந்நிலையில், துருக்கிய நீதிமன்றம் கடந்த வாரம் தொடக்கத்தில் ஹாகியா சோப்பியாவின் அருங்காட்சியக நிலையை ரத்து செய்ததுடன் அதனை மசூதியாக தவிர வேறு எந்த வகையிலும் பயன்படுத்துவது சட்டப்படி சாத்தியமில்லை என்று அறிவித்தது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200714-WA0029-1024x576.jpg)
இதனையடுத்து ஹாகியா சோப்பியா மீண்டும் மசூதியாக மாற்றப்படவுள்ளது. மேலும் வரும் ஜூலை 24ம் தேதி ஹாகியா சோப்பியாவில் முதல் இஸ்லாமிய தொழுகை நடைபெறும் என துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200714-WA0025.jpg)
வாட்டிக்கன் நகர தேவாலயத்தில் நடைபெற்ற பிராத்தனையின் போது பேசிய போப் பிரான்சிஸ்:-
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200714-WA0027.jpg)
ஹாகியா சோபியா மீண்டும் மசூதியாக மாற்றப்படுவது மிகவும் வலியை தரும் ஒன்றாக உள்ளது. என் எண்ணங்கள் இஸ்தான்புல்லுக்குச் செல்கின்றன. நான் சோபியாவைப் பற்றி நினைக்கிறேன். நான் மிகவும் வேதனையடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே துருக்கிய அதிகாரிகள் கூறுகையில்:-
ஹாகியா சோபியா மசூதியாக மாற்றப்பட்டாலும் அங்கு அனைவரும் வருகை தரலாம். மேலும் அங்குள்ள கிறிஸ்தவ சின்னங்கள் சேதப்படுத்தப்படாமல் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200714-WA0032.jpg)
இதனிடையே உள்ள உலக தேவாலயங்களின் கூட்டமைப்பு (World Council of Churches) ஹகியா சோபியாவை மீண்டும் மசூதியாக மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று துருக்கி அதிபர் எர்டோகன்-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹகியா சோபியா யுனெஸ்கோ அமைப்பால் கலாச்சார சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹகியா சோபியா மீண்டும் மசூதியாக மாற்றப்பட்டது குறித்து யுனெஸ்கோ அமைப்பு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக யுனெஸ்கோ அமைப்பின் தலைவர் ஆட்ரே அஸவ்லே (Director-General Audrey Azoulay) கூறுகையில்:-
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200714-WA0030.jpg)
ஹகியா சோபியா கட்டிடக்கலையின் மிக உன்னதமான தலைசிறந்த படைப்பு ஆகும். மேலும் ஆசிய ஐரோப்பிய கலாச்சார பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் நூற்றாண்டு சாட்சியமாக திகழ்கிறது. ஆனால் தற்பொழுது அது மசூதியாக மாற்றப்பட்டுள்ளது வருத்தத்துக்குரியது என்றார்.