தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு
திருப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் ஒருவர் குமார்(42).
இவர் விமானக் கலசத்துக்கு தங்கமுலாம் பூசும் திருப்பணியை ஏற்றதுடன், வெவ்வேறு சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். இதற்காக தனது வீட்டையே இவர் அடமானம் வைத்துள்ளார்.
இது குறித்து கூறிய குமார்:-
2012-ல் குடும்பத்தில் பெரிய இழப்பை சந்தித்தேன். மனம் தளர்ந்த நிலையில் இருந்த நான்,ஆன்மிகத்தில் கவனம் செலுத்தினேன்.
2018-ல் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றபோது, பெருவுடையார் மீதும், பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் மீதும் மிகுந்த பற்று ஏற்பட்டது. அக்கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் உருவானது.
2019 ஆம் ஆண்டு ஐப்பசி பவுர்ணமி நாளன்று நடைபெற்ற அன்னாபிஷேகத்துக்காக இரண்டரை டன் (2,500 கிலோ)அரிசி வழங்குவதாக வேண்டிக்கொண்டேன். ஆனால், ஒரு டன்அரிசியே போதுமானதாக இருந்ததால் அதை கொடுத்தேன்.
இந்த ஆண்டு கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, எழுத்தாளர் ஆர்.ஞானசேகருடன் பெருவுடையாரை தரிசித்தேன். அப்போது கும்பாபிஷேக திருப்பணியில் ஈடுபடுலாம் என முடிவு செய்தேன்.
இதற்காக பெருவுடையார் கலசத்துக்கு தங்க முலாம் பூசுவது தொடர்பாகஅறநிலையத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தேன். அப்போது, தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லேவுடன் பேச வாய்ப்பு கிடைத்தது.
அவர் விமான கலசத்துக்கு தங்க முலாம் பூசும் திருப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளதா?? என்று கேட்டார். உடனடியாக ஒப்புக் கொண்டேன். விமானத்தில் உள்ள பெருவுடையார் கலசத்துக்கு தங்க முலாம் பூசுவதற்குத் தேவையான தங்கம் குறித்தும் அறிந்து கொண்டேன்.
ரூ.20 லட்சத்துக்கு வீடு அடமானம்
இதற்காக, கோவையில் உள்ள தனது வீட்டை வங்கியில் ரூ.20 லட்சத்துக்கு அடமானம் வைத்து கடன் பெற்றார். அதோடுதனது சேமிப்பு மற்றும் பி.எஃப். சேமிப்பு தொகைகளை கொண்டு, கலசத்துக்குத் தேவையான தங்கம் வாங்கிக் கொடுத்தார்.
சுமார் 12.50 அடி உயரம் கொண்ட கலசத்துக்கு, ஸ்தபதிகள் செல்வராஜ், தங்கதுரை உள்ளிட்டோர் தங்க முலாம் பூசினர்.
பின்னர், குஜராத்தில் இருந்து மீட்டுவரப்பட்ட ராஜராஜன்-லோகமாதேவி பஞ்சலோக சிலைகளுக்கு பட்டாடைகளை வாங்கி அணிவித்தேன்.
மேலும், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினேன்.
இதற்கு சோழர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மிகுந்த உதவியாக இருந்தனர்.
வீட்டை அடமானம் வைக்க, மனைவி திவ்யா மற்றும் எனது பெற்றோர் எந்த தடையும் கூறவில்லை என்றார்.
இதேபோல 2017-ல் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பழமையான துர்க்கை கோயிலில் திருப்பணிகள் செய்துள்ளார்.
202 கிராம் தங்கம் வழங்கி மற்றொரு பக்தர்!!!
தஞ்சை பெரிய கோயில் விமான கலசம் திருப்பணி நன்கொடையாளர்களில் கோவை குமாரை தவிர மற்றொருவர் மதுரையைச் சேர்ந்த சிவில் காண்ட்ராக்டர் கார்த்திகேயன்.
இவர் 202 கிராம் தங்கமும், குமார் 134 கிராம் தங்கமும், இருவரும் இணைந்து திருப்பணிக்கான ஸ்தபதி கூலி ரூ.5.50 லட்சத்தை வழங்கியுள்ளனர் என தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே தெரிவித்தார்.