சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் நடத்தை விதிமுறைகளை பற்றி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, தேர்தலில் வேட்புமனு தாக்குதல் செய்யவரும் வேட்பாளர்களுடன் இரண்டு நபர்களுக்கு மட்டுமே அனுமதி. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு வாக்கு பதிவு மையத்திற்கு வரும் ஒவ்வொரு வாக்காளருக்கும் கையுறை வழங்கப்படும். மேலும் வாக்காளரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். அதில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு தேர்தல் நாளில் கடைசி ஒரு மணி நேரம் அவர்கள் வாக்கு அளிக்க அனுமதிக்கப்படுவர் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 24 மணிநேரமும் 1950 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என தெரிவித்தார்.தமிழகத்தில் 88937 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு அதில் 479892 அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 76 மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றார்.