ஆஸ்கார் விருதிற்கு அடுத்தபடியாக, உலகத் திரையுலக கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படக்கூடிய மற்றும் கௌரவமாகக் கருதக்கூடிய விருது கோல்டன் குளோப் . இவ்விருது விழாவானது வருடந்தோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவது வழக்கம்.
ஆங்கில படங்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பிற மொழிப்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இதில் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த வருடம் ஃபிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 78-வது கோல்டன் குளோப் விருது விழாவிற்கு, இரு தமிழ்ப்படங்கள் தேர்வாகியுள்ளன.
தமிழில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று, தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் ஆகியப் படங்களும், மலையாளத்தில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு உடன் தன்ஹாஜி, தி டிசிபல், ஈப் அலே ஓ, ஹராமி, ஜஸ்ட் லைக் தாட், ட்ரீ அண்டர் தி சன் ஆகியப் படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.
இந்நிலையில், அசுரன் திரைப்படம் கோவா இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட தேர்வாகியிருந்தததும், ஆஸ்கார் விருது தேர்வுக்கு ஜல்லிக்கட்டு படம் தேர்வாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.