புதுடெல்லி:
ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுபர்களுக்கு பரிசுத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது.
எந்த ஒரு விபத்தில் சிக்கியவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்ற உதவுவோருக்கு ரூ.5,000 பரிசு வழங்கும் திட்டத்தை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் தொடங்க உள்ளது.
இத்திட்டம் 15ம் தேதி நாடு முழுவதும் அமலாகும் என ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
நமது நாட்டில் சாலை விபத்தால் ஏற்படும் மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. விபத்தில் சிக்குவோரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும்.
ஆனால் தற்போதுள்ள நடைமுறையில் உதவி செய்பவர்களுக்கு பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படுவதால் உடனடியாக உதவிட யாரும் முன் வருவதில்லை. இதனால் பெரும்பாலான விபத்துகளில் காயமடைந்தவர் தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதால் அவரின் உயிரை காப்பாற்ற இயலாமல் போய்விடுகிறது.
விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடுபவர்களை, ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் விபத்து நடந்தவுடன் சற்று நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்த்து, பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்றுவோருக்கு ₹5000 பரிசு வழங்கப்படும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்ற உதவுவோருக்கான இத்திட்டம் வரும் 15ம் தேதி அமல் படுத்த ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்ற உதவுவோருக்கான இத்திட்டம் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்றும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.