இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் Mucormycosis என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும். இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய் தான் என்றாலும் குணப்படுத்த படக்கூடிய நோய் என்கின்றனர் மருத்துவர்கள்.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சைகள் தாக்குவது அண்மையில் தெரியவந்தது. தமிழகத்திலும் கருப்பு பூஞ்சைகளின் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் கருப்பு பூஞ்சைகளைவிட மிகவும் ஆபத்தான வெள்ளை பூஞ்சைகள் பீகார் தலைநகர் பாட்னாவில் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் பாதிப்புகள் 4 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதாக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் எஸ்.என். சிங் தெரிவித்துள்ளார்.