லக்னோ:-
இப்படியெல்லாம் சாத்தியமா ? என்று உ.பி. அதிகாரிகளை அதிர்ச்சி அதிர்ச்சி அடைய செய்துள்ளது ஒரு சம்பவம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு முழு நேர அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியை மேலும் 25 பள்ளிகளில் பணி புரிந்து 13 மாதங்களில் ரூ.1 கோடி வருமானம் பெற்றுள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/06/IMG-20200605-WA0082.jpg)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) பள்ளி என்ற பெயரில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவை சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கும் பெண் குழந்தைகள் தங்கிப் பயிலும் பள்ளியாகும். மாவட்டந்தோறும் இதேபோன்ற கஸ்தூரிபா காந்தி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/06/IMG-20200605-WA0099-1024x576.jpg)
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மண்டலங்களுக்கு ஒன்று என்னும் விகிதத்தில் இந்த பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு முழு நேர ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் சுமார் ரூ.30000 ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பள்ளி வாரியாக ஆசிரியர்களுக்கு “மனவ் சம்பதா” எனும் டேட்டா பேஸ் இணையதளத்தில் உருவாக்கப்பட்டது. அப்போது அனாமிகா சுக்லாவின் பெயர் 25 பள்ளிகளில் ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 25 மாவட்டங்களில் அனாமிகா சுக்லா ஆசிரியர் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 25 பள்ளிக்கூடங்களில் இருந்து கடந்த 13 மாதங்களாக அனாமிகா சுக்லாவுக்கு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
மெயின்புரி நகரைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியை அனாமிகா சுக்லா. இவர் அங்குள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (கேஜிபிவி) பள்ளியில் முழுநேர ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் ரேபரேலியில் உள்ள கேஜிபிவி பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். ஆனால், இவரின் பெயர் அம்பேத்நகர், பாக்பத், அலிகார், சஹரான்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 பள்ளிகளிலும் பணிபுரிவதாக பதிவேட்டில் இருக்கிறது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/06/IMG-20200605-WA0095.jpg)
இதன் மூலம் கடந்த 13 மாதங்களில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக ஊதியம் பெற்றுள்ளார். இதுவரை ஆறு மாவட்டப் பள்ளிகளில் அவருடைய பெயர் முழு நேர ஆசிரியையாக காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரேபரேலி மாவட்ட கல்வி அதிகாரி ஆனந்த் பிரகாஷ் கூறுகையில்:-
ரேபரேலி கேஜிபிவி பள்ளியில் அனாமிகா பணிபுரியாதபோது அவர் இங்கு பணியாற்றுவதாக பதிவேட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சர்வ சிக்ஷ அபியான் அமைப்பு 6 மாவட்டங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி சுக்லாவின் பெயர் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
அப்போதுதான் அனாமி சுக்லாவின் பெயர் 25 கேஜிபிவி பள்ளிகளில் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணைக்காக ஆஜராகும்படி அனாமிகா சுக்லாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் அவர் தற்போது எங்குள்ளார் என்பதும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள இந்த ஆசிரியை பற்றிய மேலும் விவரங்களை அரசு சேகரித்து வருகிறது என்றார்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விஜய் கிரன் ஆனந்த் கூறுகையில்:-
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/06/IMG-20200605-WA0101.jpg)
ஆன்லைன் மற்றும் விரல் ரேகை அடையாளம் மூலம் வருகைப்பதிவு நடைபெறும் வேளையில் ஒரு ஆசிரியை எவ்வாறு பல இடங்களில் ஒரே நேரத்தில் வருகைப் பதிவு செய்தார் என்பது வியப்பாக உள்ளது. எனவே இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கு காரணமாக அவருடைய விவரங்கள் முழுவதுமாக கிடைக்கவில்லை. எனவே அவை கிடைத்ததும் அவர் மீது வழக்குப் பதியப்பட உள்ளது.
அவர் முதலில் ரேபரேலியில் தான் நியமிக்கப்பட்டாரா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அதற்கு முன்பும் அவர் வேறு எங்காவது பணி புரிந்திருக்கலாம் என்னும் சந்தேகத்திலும் விசாரணை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.
உ.பி. பள்ளிக்கல்வி அமைச்சர் சதீஸ் திவேதி கூறுகையில்:-
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/06/IMG-20200605-WA0100.jpg)
ஆசிரியை அனாமிகா குறித்து விசாரணை செய்ய உத்தரவி்டப்பட்டுள்ளது. தவறு நிரூபணமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக அரசு ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் டேட்டா பேஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில்தான் இந்த மோசடி நடந்தது தெரியவந்தது. இதற்கு அதிகாரிகள் யாரேனும் உடந்தையாக இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.