திருச்சி புத்தூரில் உள்ள தன்னாட்சி பெற்ற பிரபல கலை, அறிவியல் கல்லூரியான பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர், பேராசிரியர் பால் சந்திரமோகன், வகுப்பறையில் மாணவிகளிடம் மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொண்டு, காலால் சுரண்டுவது, இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது என பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
![](https://images.news18.com/tamil/uploads/2021/07/pjimage-94.jpg)
பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது முதுகலைப் பட்ட மாணவிகள் 5 பேர் கல்லூரியின் முதல்வர் பால் தயாபரனிடம் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தனர்.
மேலும், பால் சந்திரமோகனுக்கு பேராசிரியர் நளினி துணை போகிறார் எனவும் இதன் காரணமாக நாங்கள் கல்லூரிக்கு வருவதற்கு பெற்றோர்கள் அச்சம் தொிவிக்கின்றனர். இதனால் இந்தக் கல்லூரியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
![மாணவிகளை உரசுவார்.. அழகா மேக்கப் போட்டு வா என்று சொல்வார்... அம்பலமான பேராசிரியரின் லீலைகள்!! – வவுனியா நெற்](https://i0.wp.com/www.vavuniyanet.com/wp-content/uploads/2021/07/L3.jpg?resize=600%2C360&ssl=1)
இந்தப்புகாரின் அடிப்படையில், திருச்சியில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஜெயந்திராணி, கல்லூரியின் துணை முதல்வர் அழகப்ப மோசஸ், பேராசிரியர் சத்தியசீலன், பேராசிரியை வயலட் ஆகியோர் அடங்கிய பாலியல் புகார்கள் குறித்த உள் விசாரணைக்குழு (விசாகா கமிட்டி) கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தியது.
புகார் கொடுக்கப்பட்ட தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை மேற்கொண்டனர்.
பேராசிரியர்கள் மீதான பாலியல் சீண்டல் என மாணவிகளின் புகார் உண்மையா..? பேராசிரியர்களுக்குள் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் தூண்டப்பட்ட புகாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையின் அறிக்கையை கல்லூரி முதல்வரிடம் அளித்துள்ளனர்.
இதையடுத்து, குற்றச்சாட்டுக்குள்ளான தமிழ்த்துறைத் தலைவர் பால் சந்திரமோகன், உதவிப் பேராசிரியை நளினி ஆகியோரை கல்லூரி நிர்வாகம் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்துள்ளது.
அதேசமயம் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ள மாணவிகள் தங்களின் கல்வி, எதிர்காலம் பாதிக்கும் என அஞ்சி தற்போது வரை காவல்துறையில் புகார் அளிக்கவில்லை.
இதனிடையே, மாணவிகள் பாலியல் புகார் குறித்து, விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டார்.
இதையடுத்து, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தமிமுன்னிஷா தலைமையில் கல்லூரியில் நேற்று விசாரணை நடத்தினர். மாணவிகளிடமும் தொலைபேசியில் விசாரணை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து, மாணவிகளின் பாலியல் புகார் குறித்து 2வது நாளாக சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிஷா தலைமையில், புகார் அளித்த மாணவிகள் மட்டுமின்றி வகுப்பு மாணவிகளிடம் தனியிடத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை விரைவில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் புகழ் பெற்ற கல்லுாரி ஒன்றில் மாணவிகள் பாலியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளான சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.